Archives: நவம்பர் 2017

தேவனுக்குத் தெரியும்

வாழ்க்கையில் பல கசப்பான அனுபவங்களால் துக்கத்தோடிருந்த ஒரு வாலிபப் பெண்ணை டீப்ட்டி ஆலயத்தில் சந்தித்தபொழுது. இவளது இருதயம் அவள்மேல் மனதுருகி, ஏதாவது உதவி செய்ய நினைத்தாள். ஒவ்வொரு வாரமும் அவளுக்கு ஆலோசனை கூறி அவளோடு ஜெபித்தாள். டீப்ட்டி அவளுக்கு நம்பிக்கையூட்டும் முன்மாதிரி. சபைத்தலைவர்கள் டீப்ட்டி எடுத்த முயற்சிகளை அறியாமல், அந்தப் பெண்ணுக்கு வேறொரு ஆலோசகரை நியமிக்க தீர்மானித்தார்கள். ஒருவருமே அந்தப் பெண்ணைக்குறித்து அக்கறை கொள்ளவில்லையென்றும் குறை கூறினார்கள்.

தனக்கு எந்தப் புகழையோ பேரையோ டீப்ட்டி விரும்பவில்லையென்றாலும், அவளுக்குள் ஒரு சோர்வு உண்டானதை அவளால் தடுக்க முடியவில்லை. தான் எதுவுமே செய்யாததுபோல் இருக்கிறது என்று என்னிடம் கூறினாள்.

ஒருநாள், அந்த வாலிபப் பெண் டீப்ட்டியைக் சந்தித்து, ‘நீங்கள் எனக்களித்த ஆறுதலுக்காக நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்’ என்றாள். டீப்ட்டி உற்சாகமடைந்தாள். “நீ அவளுக்காகச் செய்ததை அறிந்திருக்கிறேன்” என்று தேவனே சொல்வதுபோலிருந்தது. டீப்ட்டி அந்தப் பெண்ணை தொடர்ந்து ஒழுங்காக சந்தித்து வந்தாள்.

சில வேளைகளில் நமது முயற்சிகளை ஒருவரும் கவனிக்காமலும் பாராட்டமலும் இருந்தால் வருத்தப்படுகிறோம். ஆனால், நாம் செய்வதை தேவன் அறிந்திருக்கிறார் என்று வேதம் கூறுகிறது. மற்றவர்கள் பார்க்காததை தேவன் பார்க்கிறார். மனிதரின் புகழ்ச்சிக்கென்று செய்யாமல், தேவனுக்கென்றே செய்யும் பொழுது, தேவன் நம்மேல் பிரியப்படுகிறார்.

ஆதனால்தான் இயேசு ரகசியமாய் தர்மம் செய்வதை உதாரணமாய் சொல்லியிருக்கலாம், “அப்பொழது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதாதாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்” (மத். 6:4) என்றார். மற்றவர்கள் நம்மைக் கண்டுகொள்ளாமலும் பாராட்டாமலும் இருந்தாலும் பரவாயில்லை; நாம் தேவனுக்கும் பிறருக்கும் உண்மையாய்; ஊழியம் செய்வதை தேவன் பார்க்கிறார் என்பதை அறிந்து கொள்ளுவோம்.

மனிதத் தன்மையோடிருத்தல்

சட்டத்தை மீறுகிறவர்களும் மதிக்காதவர்களுமான சமுதாயத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் காவல்துறை அதிகாரியிடம் உங்கள் பொறுப்பை எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டபோது, தன் அந்தஸ்த்திற்குரிய அதிகாரத் தோரணையோடு பேசாமல், “நாமெல்லாரும் நெருக்கத்திலிருக்கிற மனிதர்கள் மத்தியில் பணிபுரியும் மனிதர்கள்” என்று பதிலுரைத்தார்.

மற்றவர்களோடு தன்னை சமமாக்கி தன்னைத் தாழ்த்தினது, எனக்கு ரோமப்பேரரசால் கொடுமைப்படுத்தப்பட்ட முதலாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்குப் பேதுரு எழுதியதை நினைவுபடுத்தினது. “நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும் இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களாகவும், மனதுருக்கமுள்ளவர்களாகவும், இணக்கமுள்ளவர்களாகவும் இருங்கள் என்று எழுதினான் (1 பேது. 3:8). நெருக்கத்தில் இருப்பவர்களுக்கு நாம் செய்யக்கூடிய சிறந்த காரியம், மனிதத்தன்மையோடிருப்பதேயாகும் என்று பேதுரு ஒருவேளை சொல்லியிருக்கக் கூடும். அதாவது நமக்குள் எந்த வித்தியாசமும் இல்லை என்பதே, நமக்கு உதவும்பொருட்டு குமாரனைப் பிதா ஒரு மனிதனாக பூமிக்கு அனுப்பினபொழுது செய்தது இதுதானோ? (பிலி. 2:7).

விழுந்துபோன மனிதனின் பாவ இருதயத்தின் ஆழத்தை மட்டும் நோக்கும் பொழுது மனிதனின் தகுதியை அலட்சியமாய் நினைக்கத் தோன்றலாம். ஆனால், மனுஷீகமாக இவ்வுலகிற்கு நாம் ஆற்றிய பங்கை நினைத்தால் என்ன தோன்றும்? நாமெல்லாரும் ஒரே தன்மையுடையவர்கள் என்பதை நினைத்து பிறருக்குப் பணிவிடை செய்வதே பூரணமான மனிதத்தன்மை என்று இயேசு போதித்தார். தேவன் நம்மை மனிதனாக நம்முடைய சாயலில் உருவாக்கி நிபந்தனையற்ற தம் அன்பினால் நம்மை மீட்டுக்கொண்டார்.

பல போராட்டங்களில் சிக்கியுள்ள மனிதர்களை இன்று நாம் சந்திப்பது நிச்சயம். நெருக்கங்களிலிருப்பவர்களோடு, நாமும் அவர்களைப் போன்றவர்களே என்கிற எண்ணத்தோடு அவர்களிடம் மனித நேயத்தைக் காட்டுவோமென்றால், நாம் மாபெரும் வித்தியாசத்தை உண்டாக்குவோம் என்பதை சிந்தியுங்கள்.

இதயத்தின் உண்மையான உறைவிடம்

நாங்கள் வெஸ்ட் ஹைலாண்ட் டெபியர் நாயைப் பல வருடங்களாக வளர்த்துவந்தோம். அது மிகவும் முரட்டுத்தனமான, உயர் ஜாதி நாய். பொந்துகளில் வசிக்கும் இவ்வின நாய்கள், இவை மரநாய்களின் பொந்துகளில் நுழைந்து அவற்றுடன் சண்டைபோடும். எங்கள் வெஸ்ட்டி பல தலைமுறைகளாக, அதன் இனத்துடன் தொடர்பு கொள்ளாமல் இருந்தபோதிலும் அதன் பிறவிக் குணம் போகவில்லை. ஒரு சமயம், எங்கள் வீட்டு பின்புறத்தில் உள்ள பாறைக்கடியில் குழிதோண்டி வசிக்கும் “கிரிட்டர்” பிராணியைப் பார்த்துவிட்டது. விடாப்பிடியாக அதைப்பிடிக்க பல அடி நீளமுள்ள ஒரு பொந்தைத் தோண்டியது. ஒன்றும் அதைத் தடுக்க முடியவில்லை.

இப்பொழுது இந்தக் கேள்வியை ஆராய்ந்து பாருங்கள். மனிதர்களாகி நாம் ஏன் ஏதோ வொன்றைக் கண்டுபிடிக்க தொடர்ந்து முயன்று முயன்று பார்க்கிறோம்? ஏன் ஒருவரும் ஏறாத மலைச்சிகரங்களுக்கு ஏற முயற்சிக்கிறோம்? செங்குத்தான சரிவுகளில் பனிச்சறுக்கு விளையாடுவது ஏன்? பயங்கரமான வேகமாய், பாறைகளினூடாய் பாயும் ஆபத்தான மலை ஓடைகளில் படகை ஓட்டுவதேன்? இயற்கையின் சீற்றங்களுக்கு எதிராய் போராடுவது ஏன்? ஒன்று தன் ஆத்ம திருப்திக்காக ஆபத்தான காரியங்களில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவது. ஆனால் இன்னும் அதிகம் இருக்கிறது. ஆதாவது, சாகசம்புரியும் தேவனை அறியும் ஆசை அது நமக்குள்ளாக பிறவியிலேயே புதைந்து கிடக்கும் ஆவல். நம்மால் தேவனைத் தேடாமல் இருக்கவே முடியாது.

நாம் அதை அறியாமலிருக்கிறோம். ஏதோ ஒன்றிற்கு ஆசைப்படுகிறோம் என்பது மட்டும்தான் நமக்குத் தெரியும். ‘அது என்னவென்று தெரியாவிட்டாலும், நீ ஏதோ ஒன்றிற்கு ஆசைப்படுகிறாய். ஆனால் அதை அடைய நீ உயிரை பணயம் வைக்கவும் ஆயத்தமாயிருக்கிறாய்’ என்று பிரபல எழுத்தாளர் மார்க் ட்வெய்ன் கூறியுள்ளார்.

தேவனே நமது இருதயத்தின் உண்மையான உறைவிடம். பரிசுத்த அகஸ்டினின் மிகப் பிரபலமான கூற்றாகிய ”தேவனே, நீர் எங்களை உமக்கென்று உருவாக்கினீர்; எங்கள் இருதயம் உம்மில் இளைப்பாறும்வரை, எங்களுக்கு இளைப்பாறுதலில்லை”.

இருதயம் என்பதென்ன? அது நமக்குள்ளிருக்கும் தேவன் மாத்திரம் நிரப்பக்கூடிய வெற்றிடம்.

அறுவடையும் பலி செலுத்துதலும்

அநேக ஆயிர ஆண்டுகளுக்குமுன், தேவன் மோசேயோடு நேரடியாகப் பேசி, தமது ஜனங்களுக்கு புதிதான  ஓர்பண்டிகையையை நியமித்தார் (யாத். 23:16). மோசே குறிப்பிட்டுள்ளபடி நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைக் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையை ஆசரிப்பாயாக என்றார்.

இன்று உலகத்தின் பல நாடுகளில் அறுப்பின் பண்டிகைக்கொத்த பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. கானா நாட்டில் அறுப்பின் பண்டிகையை “யாம் YAM” பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். பிரேசிலில், ஆகாரத்திற்குத் தேவையான விளைச்சல் கிடைத்ததற்காக “Dia de Acao de Gracas” பண்டிகையை ஆசரிக்கிறார்கள். சீனாவில், இலையுதிர் காலத்தின் மத்தியில் “Mid Autumn-(Moon)” திருவிழா உண்டு. அமெரிக்காவிலும், கானடாவிலும் அறுப்பின் பண்டிகை, நன்றி சொல்லும் (Thanksgiving) நாளாகக் கொண்டாடப்படும்.

வெள்ளத்திற்குப்பின், நோவாவிற்கும் அவன் குடும்பத்திற்கும், நமக்கும், வாழ்வதற்குத் தேவையானவற்றைப் பூமியில் தாம் வைத்திருப்பதை நினைவுபடுத்தினார். இதுவே அறுப்பின் பண்டிகைகளின் இலக்காகும். பூமியுள்ளள நாளளவும் விதைப்பும், அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார் (ஆதி. 8:22). அறுவடைக்கான நன்றி நம்மைத்தாங்குகிற தேவனுக்கு மட்டுமே.

நீங்கள் எங்கே வசித்தாலும், நிலத்தின் அறுவடையை எப்படிக் கொண்டாடினாலும், இன்றைக்கு நேரமெடுத்து தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். ஏனென்றால், தேவனுடைய சிருஷ்டிக்கும் ஞானமில்லாமல் நமக்கு அறுவடையுமிராது, கொண்டாட்டமுமிராது.